Thursday, September 10, 2009

மொய் தேவை - ஒரு குறிப்பு

அந்த ஊருக்கு போறது ஒரேயொரு பஸ்.
ஆனா ஊருக்குள்ள அண்டா அண்டாவா காசு.
வேற எங்கயும் இல்லங்க நம்ம தமிழ் நாட்டுலதான்.
ஒன்னும் புரியலைல, இத்தப்படிங்க மச்சான்....
எங்க ஊருக்கு வரணும்னா ஒரே ஒரு பஸ் தாங்க இருக்கு, அந்த பஸ்ஸ விட்டா பொடி நடயாவோ (என்ன பிஸ்கோத்து அஞ்சு கி.மீ.தான்...) இல்ல ஊருக்குள்ள போற ஒரு TVS 50-யையோ புடிச்சு தான் வரணும். அப்படிப்பட்ட கிராமம் தான் எங்க ஊரு. ஆனா இந்த ஊருலயும் ஒரு சில விசேஷ நாட்கள் உண்டு, அன்னைக்கின்னு பாத்திங்கனா, பல ஊர்லேர்ந்தும் எங்க ஊருக்கு ஆள் வரும், முக்கியமா ஊருக்குள்ள ஒரே பந்தலுக்கு கீழ அண்டா அண்டாவா பல லட்ச கணக்கில பணம் தேறும் (சில சமயம் கோடிகளும் உண்டு).....!!!!
இருங்க மேட்டருக்கு வர்றேன்....
தஞ்சாவூர் மாவட்ட பட்டுக்கோட்டை வட்ட பேராவூரணிய மையமா வச்சு ஒரு பதினோரு கிராமம் இருக்குதுங்க. அட, எல்லா எடத்துலயுந்தான் கிராமம் இருக்கு, அங்க என்னடா விசேஷம்னு நீங்க கேக்கலாம். அங்கதாங்க மொய்த்தேவை-னு ஒரு விஷயம் நடந்துட்டு இருக்கு (மச்சான்ஸ் மொய் வேற, மொய்தேவை வேற), அப்புறமா இந்த லட்சம் கோடி எல்லாம் அங்கதான...
மொய் அப்படின்னா என்ன மச்சான்னு சில பேர் கேக்கலாம்.
அதாகப்பட்டது என்னன்னா, இப்ப என் வீட்டுல ஒரு கல்யாணம். நான் என்ன பண்ணுவேன் இந்த பதினோரு கிராமத்துக்கும் பத்திரிக்கை வைப்பேன். எல்லாரும் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தி சாப்பிட்டு போகும்போது கொஞ்சம் காசு குடுத்திட்டு போவாங்க. அதத்தான் மொய்-னு சொல்வோம். இது கல்யாணம்னு இல்ல காதுகுத்து, பூப்பெய்தல், புதுமனைனு எல்லா விசேஷத்துக்கும் பொருந்தும்.
காசு எல்லாம் சும்மா இல்லங்க, வாங்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் ஒரு நோட்டு புத்தகத்தில ஒவ்வொருத்தரோட முழு விலாசத்தோடயும் எழுதப்படும். இப்ப எனக்கு மொய் வச்சவங்க வீட்டுல விசேஷம் வந்திச்சுன அந்த மொய் பணத்த நான் கொஞ்சம் காசு கூட சேத்து திருப்பி தரணும். இதுதான் வழக்கம்.
ஒரு நண்பர் எனக்கு 1000 ரூபாய் மொய் செஞ்சிருக்கார்னு வச்சிக்கங்க, இப்ப நான் அவருக்கு திரும்ப வைக்கும்போது, வெறும் 1000 மட்டும் கொடுத்து கணக்க முடிசிக்கிடலாம் இல்ல “1000+ (என்னுடைய புதிய தொகை)” சேத்து கொடுக்கலாம். அவர் திரும்ப வைக்கும்போது என்னோட தொகை + அவரோட புது தொகையை சேத்து தருவார்.இது அப்படியே தொடரும்.
மேல சொன்னது எல்லாம் விசேஷத்துக்கு வந்துட்டு மொய் வைக்கிறது (இது தமிழ் நாடு முழுவதும் பரவலா காணப்படுகிற ஒரு விஷயம்) , இத தவிர எந்த விசேஷமும் இல்லாம “ மொய் தேவை ” அப்படினே தனியா ஒன்னு நடக்கும் - இதுதான் எங்கூரு ஸ்பெஷல் ஐட்டம்.
ஒரு சில வீடுகள்ல தொடர்ந்து எல்லாருக்கும் மொய் எழுதிட்டு வருவாங்க, ஆனா அவங்க வீட்டுல பல வருஷமா விசேஷமே நடந்திருக்காது. அந்த மாதிரி நேரத்துல என்ன செய்வாங்கனா, அவங்களே மாதிரியே இருக்க ஒரு நாலஞ்சு குடும்பங்கள் ஒன்னு சேர்ந்து “ மொய் தேவை ”-னு ஒன்ன தனியா வப்பாங்க. இதுக்கும் பத்திரிக்கை அடிச்சு ஊரெல்லாம் கூப்பிடுவாங்க.
மொய் தேவை எந்த ஊருல நடக்குதோ அங்க ஒரு பெரிய பந்தல் போட்டு, பந்தலுக்கு கீழ மொய் விருந்து குடுக்கிற ஒவ்வொருவரும் ஒரு டேபிள் சேர் போட்டு, டேபிள் மேல அண்டாவ வச்சிட்டு உக்காந்து இருப்பாங்க. உக்காந்திருக்குற இடத்துல ஒரு சார்ட் பேப்பெர்ல (CHART PAPER) அவங்க விலாசம் எழுதப்பட்டிருக்கும், மொய் வைப்பவர்கள் அடையாளம் கொள்ள வசதியாக. ஒரு நோட்டு புத்தகம் பேனா கூடவே தொணக்கி அவுக பங்காளிகள் எல்லாரும் சேர்ந்து வரவு பாத்துட்டு இருப்பாங்க.
உதாரணத்துக்கு விலாசம் இப்படி தான் இருக்கும்.
பெயர் குழப்பம் வராம இருக்கத்தான் இத்தனை இனிஷியல்கள்.
காலைல ஆரம்பிக்கிற இந்த கலெக்ஷன் சமாசாரம் ராத்திரி வரைக்கும் தொடரும். இதுக்கு இடையில வந்தவங்க எல்லாருக்கும் பலமான மதிய விருந்தும் உண்டு ( என்ன கடா வெட்டி சோறு போடுறதுதான்). அந்த விருந்துக்கு ஆகுற செலவை ஐந்து குடும்பங்களும் பகிர்ந்துக்குவாங்க.
இன்ன பிற சுவாரஸ்ய தகவல்கள்.
1.மொய் நோட்டுல கணக்கு எழுதுறதுக்குனே ஊருக்குள்ள சில பேர் இருப்பாங்க (கையெழுத்து அழகா இருக்கணும், வேகமா எழுதணும், தப்பில்லாம எழுதணும் இதுதான் அவங்களோட தகுதி), மொய் சீசன்ல இவங்களுக்கு பயங்கர டிமாண்ட் இருக்குங்கண்ணா.
2.விருந்து அன்னக்கி பந்தலுக்கு வர முடியாதவங்க எல்லாம் , அதுக்கு மறு நாளோ இல்ல அதுக்கும் மக்கா நாளோ மொய் தேவை வச்சவரோட வீட்டுக்கே போய் பணத்த கொடுத்திட்டு வருவாங்க. இந்த பணத்த எல்லாம் அதே நோட்டுல "பின் வரவு"-னு எழுதி வைப்பாங்க.
3.இப்ப ஒரே நபருக்கு நான் ரெண்டாவது முறை மொய் செய்ரேன்னா, பணம் கொடுக்கும் பொது அத குறிப்பிட்டு சொல்லணும். (இது ரெண்டாவது மொய் அப்படின்னு எழுதும்போது சொல்லிடணும்).
4.தெரியாத ஒரு நபருக்கு முதல் முறையாக வைக்கப்படும் மொய் "புது நடை"-னு சொல்வாங்க.
5.விருந்து வச்சவரு ஒரு மூணு நாலு நாள் வெய்ட் பண்ணிட்டு , எல்லா கணக்கும் வந்திடுச்சானு பாப்பாரு, யாராவது பணத்த தராம இருந்தாங்கனா அவங்க வீட்டுக்கு நேர்ல போய் கேட்டு வாங்கிட்டு வந்திடுவாங்க.
6.ஆரம்பத்துல ஒரு குறிப்பிட்ட சாதிக்கரங்களுக்குள்ள மட்டும் இந்த மொய் விருந்து நடந்திட்டு இருந்தது. இப்ப அந்த ஊர்களுக்குல இருக்குல்ல மற்ற மதத்தினரும் கூட சேர்ந்துக்கிட ஆரம்பிச்சுட்டாங்க.
7.எனக்கு தெரிஞ்சு எங்க ஊர் பக்கம் ஒரு ஆளுக்கு 70 லட்சம் எல்லாம் அண்டாவுல விழுந்திருக்கு. (ஒரு கோடி விழுந்துச்சுன்னு கேள்வி பட்டிருக்கேன்).
8.ஒவ்வொரு வருஷ ஆரம்பத்திலயும், இந்த வருஷம் யார் யாரு மொய் விருந்து வைக்க போறாங்க அப்படிங்கறத ஒரு தகவல் கையேடா (புத்தகம்னா !) வெளியிட்டுருவாங்க. உதாரணமா இன்ன தேதியில இன்ன இடத்துல இன்னாரு மொய் தேவை நடத்துராருன்னு போட்டிருக்கும். பக்கத்திலேயே ரெண்டு பிரிவு (COLUMNS) இருக்கும், அதுல மொய் தேவை வக்கிறவர் நமக்கு எவ்வளவு மொய் போட்டிருக்கார், நாம அவருக்கு எவ்வளவு போட போறோம் எல்லாத்தையும் எழுதி வச்சுக்கிடலாம். (இதுதான் ப்ளான் பண்றது !!)
இதுல பல சூட்சுமம் எல்லாம் இருக்கு, அதையெல்லாம் இன்னொரு பதிவாவே போடலாம்.
மச்சான்ஸ், ஏதாவது கேக்கணும்னு தோணுச்சின்னா அதையே பின்னூட்டமா போடுங்க....

6 comments:

  1. மச்சான் நிஜமாவே சுவாரஸ்யமா இருக்கு...
    மொய் வைக்கிருதள இவ்ளோ விஷயமா ......
    (எனக்கு பாண்டியராஜன் படம் நியாபகத்துக்கு வருது)

    ReplyDelete
  2. இன்னும் ஏகப்பட்ட விஷயம் இருக்கு மச்சான், இது சும்மா "TRAILOR" தான்.

    ReplyDelete
  3. வெற்றிகரமா உலவு-லயும் நம்ம பதிவ போட்டாச்சு.

    ReplyDelete
  4. இதுதாங்கண்ணா அந்த லெவன் வில்லேஜ்.

    ஆவணம்
    நெடுவாசல்
    களத்தூர்
    வேம்பங்குடி
    பைங்கால்
    குருவிக்கரம்பை
    நாடியம்
    வீரியங்கோட்டை
    ஆண்டாக்கோட்டை
    முடப்பிளிக்காடு &
    பேராவூரணி

    ReplyDelete
  5. இதுல்ல எப்படி லாபம் பாக்குறாங்க ? வர்ற பணத்த எதாவது வியாபாரத்துல இன்வெஸ்ட் பண்ணி பொழசிபாங்களா? பணம் சுத்திகிட்டே இல்ல இருக்கும் ! இது ரொம்ப நாள் சந்தேகம் !

    ReplyDelete
  6. அன்பின் சிவன்

    கேள்விப்பட்டிருக்கிறேன் - இப்பத்தான் புரிஞ்சுது

    நல்லாருக்குப்பா
    நல்வாழ்த்துகள் சிவன்
    நட்புடன் சீனா

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...