Monday, October 18, 2010

பேட்டில் ராயேல் Battle Royale (バトル・ロワイアル Batoru Rowaiaru - 2000




குடும்பம் குட்டி குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டிய ஒரு உன்னத காவியம், இந்த ஜப்பானிய திரைப்படம். உங்களுக்கு தக்காளி சாஸ் பிடிக்குமா? இந்த படத்தில் பல காட்சிகள் அப்ப உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்..

ஓகே ஓகே கொஞ்சம் சீரியஸா பேசலாம். :)

பேட்டில் ராயேல்(Battle Royale) 2000-ம் வருடம் ஜப்பானில் வெளிவந்த ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். படத்தோட கதையை பாக்குறதுக்கு முன்னாடி, இந்த படத்த பத்தின பிரபல விமர்ச்சகர்களோட கருத்தை பார்ப்போம்.

"This is a heart-stopping action film, teaching us the worthy lessons of discipline, teamwork, and determination, but wrapping them up in a deliberately provocative, shockingly violent package. ""

படத்த பத்தி ஒரு போர்த்துகீசிய விமர்சகர் இன்னா சொல்றார்னா,

"Os intertítulos e o excesso de flashbacks comprometem um pouco o ritmo do filme, mas, de modo geral, a ação é muito bem conduzida e os personagens, satisfatoriamente desenvolvidos" - (ஒன்னும் புரியலனா free வுட்ருங்க, ஏன்னா எனக்கும் ஒன்னும் புரியல..)



ரத்தத்திற்கு பயப்படுபவர்கள், வீக் பாடிஸ், இளகிய நெஞ்சம் படைத்தவர்கள், குழந்தைகளை விரும்புவர்கள் - மச்சான்ஸ், இந்த படமும் பதிவும் உங்களுக்கானது அல்ல, நம்ம அடுத்த பதிவுல பாப்போம், வருகைக்கு நன்றி.
மத்த மச்சான்ஸ் பாலோ மீ..

ஒரு நூற்றாண்டின் விடியலில் ஜப்பான் தேசத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படுகிறது, பெரியவர்களுக்கு வருங்கால சங்கதியினரின் மீதான நம்பிக்கையே போய்விட, அவர்களை ஒழுங்கு படுத்தும் பொருட்டு புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுகின்றனர். அதுதான் Millenium Education Reform (அ) B .R ACT - Battle Royale Act.


அது என்ன அப்படி ஸ்பெஷல் சட்டம் என்றால், ஏதோ ஒரு பள்ளியின், ஏதோ ஒரு வகுப்பு மாணவர்களை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும், அவர்கள் அனைவரும் ஆள் அரவம் இல்லாத ஒரு தனி தீவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கே அவர்கள் ஒரு கேம் விளையாட வேண்டும். "ப்பூ அவ்வளவுதானா..." என்பவர்கள் பின் வரும் விளையாட்டின் விதிகளை படிக்கவும்.

--இந்த விளையாட்டு மூன்று நாட்கள் நடைபெறும், தீவுக்குள் எங்கு வேண்டுமென்றாலும் போகலாம்.
--இந்த விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் மற்றவர்களை கொல்ல வேண்டும், நீங்கள் படித்தது சரிதான், மற்ற அனைவரையும் கொல்ல வேண்டும்.கடைசியில் இருக்கும் ஒருவரே வெற்றி பெற்றவர், அவர் மட்டும் வீட்டுக்கு போகலாம்.
--ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மீதம் இருந்தால் அனைவரும் கொல்லப்படுவர்.
--ஒவ்வொருவர் கழுத்திலும் ஒரு உலோக பட்டை உண்டு, அதை வைத்து அவரை ரிமோட் மூலம் கொல்ல முடியும்.
--முழு தீவும் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது, அவ்வப்போது ஒரு பகுதி டேஞ்சர் ஜோன் என்று அறிவிக்கப்படும், அப்போது அந்த பகுதிகளில் இருப்பவரின் காலர் பட்டைமூலம்  அவர் கொல்லப்படுவார்.
--ஒவ்வொருவருக்கும் ஒரு பை கொடுக்கப்படும். அதில் கொஞ்சம் உணவு, கொஞ்சம் தண்ணீர், தீவின் வரைபடம் மற்றும் ஏதேனும் ஒரு ஆயுதம் இருக்கும்.



ஷுயா நானாஹரா நண்பர்களுடன் (ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ) பள்ளி மூலம், சுற்றுலா செல்ல, அனைவருக்கும் மயக்க வாயு செலுத்தி, அரசாங்கம் அவர்களை அந்த தனி தீவில் சேர்க்கிறது. அனைவரும் மயக்கம் தெளிந்து எந்திரிக்க, அனைவரின் கழுத்திலும் உலோக பட்டை அணிவிக்கப்படிருக்கிறது. ஒருவருக்கும் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவர்களின் பழைய ஆசிரியர் ஒருவர் உள்ளே நுழைகிறார். இவர்தான் இந்த கேம்ஷோவை நடத்த போகிறவர்.

நானாஹரா- வின் வகுப்பு தோழர்கள் நாற்பது பேர், அத்துடன் மாற்றம் ஆகி வந்த வேறு பள்ளி மாணவர்கள் இருவர் என்று மொத்தம் நாற்பத்தி இரண்டு பேர் இந்த கேம் ஷோவிற்கு வருகின்றனர். அனைவருக்கும் விதிகள்
சொல்லப்பட்டு, ஆளுக்கு ஒரு பை கொடுத்து அனுப்பி வைக்கிறார் ஆசிரியர். விதிகள் சொல்லும்போதே ஒரு பெண் எதிர்த்து பேச, அவள் அங்கேயே கொல்லப்படுகிறாள். அதே போல் கழுத்து பட்டையின் செயல்பாட்டினை
விளக்க, ஒரு மாணவனின் தலையையும் வெடிக்க வைக்கிறார் ஆசிரியர்.

மீதம் உள்ள நாற்பது பெரும் , வெளியே செல்ல, மூன்று நாட்கள் என்ன நடக்கிறது, எத்தனை பேர் கொல்லப்படுகின்றனர், கடைசியில் யார் ஜெயித்தார் என்பதே கதை.



ஒரு சிலர் மற்றவர் அனைவரையும் கொன்று விட வேண்டும் என துடிக்க, ஒரு சிலர் யாரையும் கொல்லாமல் மூன்று நாட்களை உயிருடன் கடக்க முயற்ச்சி செய்கின்றனர், படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை,ஸ்பெஷல் எபக்ட்ஸ் மற்றும் இயக்குனர். படத்தில் வரும் லைட் ஹவுஸ் காட்சி ஒன்றே இதற்கு போதும். மனுஷன் அந்த சீன்ல பூந்து விளையாடி இருப்பார். ஒருவரை மட்டுமே கதை மையம் கொல்லாமல் நாற்பது பேரையும், அவர்களின் செயல்களையும் காண்பிக்க திரைக்கதை முயற்சி செய்திருக்கிறது.

ஒரு அல்டிமேட் த்ரில்லர் படம் வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

படத்தின் ட்ரைலர் இதோ.


Thursday, October 14, 2010

சிட்டி ஆப் காட் - City of God - Cidade de Deus - 2002

வெகு நாள் கழித்து ஒரு பதிவு.. !!!


அதே போல் நான் வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த படத்தை பற்றிதான் இந்த பதிவும். படத்தின் பெயர் - City of God . 2002 இல் வெளி வந்த இந்த பிரேசிலிய நாட்டு க்ரைம் மாபியா திரைப்படத்தை பெர்னாண்டோ மீரல்ஸ் என்பவர் இயக்கியிருக்கிறார்.

பல இடங்களில் "பார்க்க வேண்டிய படங்களின்" வரிசையில் இந்த படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அதனால்தான் மச்சான்ஸ், ரொம்ப நாட்களாக இந்த படத்தை பார்க்க ஆர்வம். நம்முடைய நாட்டில் கொஞ்சமும் எதிர் பார்க்க முடியாத கதை மற்றும் கதைக்களம்.



பிரேசில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது கதை. ரியோ நகரத்தின் புறநகரத்தில் அமைந்திருக்கும் ஒரு புதிய குடியிருப்பு பகுதியின் பெயர்தான் "சிட்டி ஆப் காட்". இந்த சிட்டி ஆப் காட் நகரத்தின் தெருக்களில் ஓடி விளையாடும்(????) சிறுவர்களை பத்திதான் படம். முழுப்படமும் ராக்கெட் என்ற சிறுவனை முதன்மை பாத்திரமாக நிறுத்தி (இவர் இந்த படத்தின் ஹீரோ இல்லை...), அவனின் கண்ணோட்டத்தில் ஆரம்பித்து முடிகிறது.

தடதடக்கும் இசையுடன் தொடங்குகிறது படத்தின் முதல் காட்சி. சமைப்பதற்காக கட்டி வைக்கப்பட்டிருத்த கோழி தப்பித்து ஓட, அதை ஏராளமான சிறுவர்கள் துப்பாக்கியுடன் துரத்துவதாக ஆரம்பிக்கிறது. (கோழியையே துப்பாக்கியுடன் துரத்தும்போதே யோசித்திருக்க வேண்டும் படம் எப்படி இருக்கும் என்று..!!!).

இந்த இடத்தில் தான் கோழியை துரத்தும் கும்பலின் எதிரில் வருகிறான் நம்ம கதை சொல்லி (Narrator) ராக்கெட் . அதே நேரம் ரோட்டின் மறு புறத்தில் இந்த ரவுடி கும்பலை பிடிக்க போலீஸ் வந்து சேர்கிறது, இரண்டு பக்கமும் துப்பாக்கிகளை வைத்திருக்கும் இவர்களுக்கு இடையில் ராக்கெட் மாட்டிக்கொள்ள, ஒரு 180 டிகிரியில் காமெரா அவனை சுழல்கிறது, காமெரா அவன் கண்ணை காண்பிக்க, " நான் எப்படி இந்த இடத்தில் ?? " - என்று கதை சொல்ல தொடங்குகிறான் ராக்கெட்.



அப்படியே படம் பின்னோக்கி பயணித்து 1960 - களில் தொடங்குகிறது, சிட்டி ஆப் காட் நகரம் எப்படி உருவானது, மக்கள் எப்படி உயர் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இங்கு வந்து சேர்கின்றனர், ஏழ்மையை போராட சி.ஆ.கா மக்கள் செய்யும் சின்ன திருட்டு, வழிப்பறி அனைத்தும் ராக்கெட் மூலமாக நமக்கு விவரிக்கப்படுகிறது. இப்படி சிறு திருட்டுகளை செய்யும் "டெண்டெர் ட்ரையோ " என்ற மூவரிடம் இருந்து கதை தொடர்கிறது.

இந்த மூவரையும் ஹீரோ போல் பாவிக்கும் ஒரு பொடிசு லில்-ஸே. ஒரு கட்டத்தில் மூவருக்கும் பணம் தேவைப்பட, லில்-ஸேவின் ஐடியாப்படி ஒரு மோட்டலை(விடுதி) கொள்ளை அடிக்க போகின்றனர் நால்வரும் (லில்-ஸே உட்பட..). அங்கு ஏற்படும் சில எதிர்பாரா சம்பவங்களும், அதனை தொடரும் சில பல கொலைகளும் கால ஓட்டத்தில் லில்-ஸேவை எப்படி ஒரு மாபியா கும்பலுக்கு தலைவன் ஆகிறான் என்பது வரை வந்து நிற்கிறது படத்தின் முதல் அத்தியாயம்.



பின் வரும் அத்தியாங்களில் ராக்கெட் இந்த கறைபட்ட சமூகத்தில் இருந்து விடுபட்டு எப்படி கரையேறுகிறான் என்றும், மறுபுறம் லில்-ஸே போதை பொருள் மார்க்கெட்டை தன் கைக்குள் கொண்டு வருவதையும் விவரிக்கின்றது. இந்த காட்சிகளில் குறிப்பிடப்படவேண்டியது நடுவில் வரும் ஒரு "அப்பார்ட்மென்ட்டின் கதை". ஒரு அப்பார்ட்மென்ட்டை மையமாக வைத்து, அங்கு முதலில் குடி இருந்த பெண்ணிடம் இருந்து எப்படி போதை வியாபாரம் பல கைகளுக்கு மாறி கடைசியில் லில்-ஸே எப்படி அதை கைப்பற்றுகிறான் என்பது வரை, அந்த அப்பார்ட்மென்டின் கண்ணோட்டத்திலேயே அதை விவரிப்பது சுவாரஸ்யம்.

லில்-ஸே தன் நண்பன் பென்னியுடன் சேர்ந்து மொத்த நகரத்தையும் அபகரிக்க முற்ப்படும்போது, கேரட் என்ற இன்னொரு மாபியா தலைவனுடன் மோத நேர்கிறது, அதே நேரம் ராக்கெட்டின் காதல் முயற்சி, மாபியா முயற்சி என அனைத்தும் தோல்வி அடைகிறது. உதாரணம் : ஒரு பேக்கரியை கொள்ளை அடிக்க ராக்கெட்டும் அவன் நண்பனும் துப்பாக்கியுடன் செல்ல, அங்கு இருக்கும் பெண் அழகாக இருப்பதால் கொள்ளை அடிக்க மனம் இன்றி அந்த பெண்ணின் போன் நம்பருடன் திரும்புகிறான் ராக்கெட். பய புள்ள நம்ம இனம்.



லில்-செயின் நண்பன் பென்னி கொல்லப்பட, கேரட் மீதான லில்-ஸேவின் வெறியாட்டம் தொடங்குகிறது. இதற்கிடையில் லில்-ஸேவிற்கு எதிராக நாக்அவுட் - நெட் என்கிறவரும் கேரட்டின் மாபியாவில் சேர்ந்துகொள்ள (இது ஒரு தனி கிளைக்கதை), இரு கும்பலுக்கும் ஒரு பெரிய போரே தொடங்குகிறது. இவர்களுக்கு இடையில் ராக்கெட் வந்து சேர்ந்தது எப்படி, அந்த கோழி பிடிக்கும் முதல் காட்சி என்ன ஆனது என்று பல சுவாரஸ்யங்கள்- உடன் படம் தொடங்கியே இடத்திலேயே படத்தை முடித்திருப்பது டைரக்டர் டச்.
இன்னும் படத்தில் சுவாரஸ்யங்களும் கிளைக்கதைகளும் ஏராளம்..!!!



க்ரைம், போதை, கொக்கைன், மாபியா, லஞ்சம், வறுமை என பிரேசில் நாட்டின் அணைத்து இருண்ட பக்கங்களையும் வெளிச்சத்துக்கு காட்டியிருக்கிறார் இயக்குனர். படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்ப்பரிக்கும் இசை (பல காட்சிகளில் அந்த காட்சியின் டெம்போவிற்கு ஏற்ப நம்மையும் ஆட வைக்கிறது ), காமெரா (அற்புதமான ஒலியமைப்பு, ஒரு டார்க் தீம் படத்திற்கான முன்னோடி ) மற்றும் இதுவரை எங்கும் பார்த்திடாத இந்த படத்தின் நடிகர்கள்..மிக மிக யதார்த்தம்.

நான்கு ஆஸ்கார் நாமினேஷன் உட்பட பல விருதுகளை குவித்த இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ்....!!!!


படத்தின் ட்ரைலர்



-------------------------------------------------------------------------------------------------------------------------------
Related Posts Plugin for WordPress, Blogger...