Wednesday, February 15, 2012

உன் இன்மை




புகைப்படங்கள் நிரம்பிய படுக்கையறை
இசைத்தட்டுகள் இறைந்து கிடக்கும் ஊஞ்சல் 
ஸ்பரிசங்களை சேகரித்த அலமாரி 
உரையாடல்கள் உறைந்திருக்கும் சுவர்கள்
.
.
என்னை விட உன் வெறுமையை 
எப்படி தாங்கப்போகிறதோ
நம் கற்பனை வீடு.

*****

மிரளச்செய்யும் அன்பு 
மிரட்சி கலந்த ஆளுமை 
எது நீ? எது நான் ?
மாறிப் போவதறியாமல் 
முழித்து விழிக்கையில் 
கடந்து விடுகிறது 
இன்னுமோர் இரவு!

*****

மழை விரும்பா தாவரம் 
எரிதழல் தீண்ட எஸ்கிமோ 
உன் விலகலில் நான். 
*****                                                                         - அருண்.இரா

Monday, June 13, 2011

வோட்கா இரவுகள் - 00 : 01



துண்டு துண்டாய் 
என் சதைப்பிண்டத்தை நானே 
கூறிட்டுக் கொண்டிருந்தேன்.. 

இறுதிச்சொட்டு 
உயிரிடமிருந்து 
பீறிட்டு பெருக்கெடுக்க
ஆரம்பித்தது அழுகை..  

தந்தையின் அஸ்தியைக் கரைக்கும் 
தனயனைப்போல் 
மிகச் சிரத்தையுடன் மிச்சமிருக்கும் 
என் கருநீல உடலை
நீர்த்திவளைகளிலான 
கடலில் 
கரைத்துக்கொண்டிருந்தேன்... 

உள்ளங்கையில் ஜனித்து 
உள் நரம்பெங்கிலும் 
வியாபித்திருந்த உன் வாசம் 
போக்கும் ஒரு வகை 
வேள்வி தான் அது.

நீர்த்தொட்ட நொடியினில் 
ஒரு துளியென தொடங்கி..
தீயென ப்பரவி
அண்டத்தின் மிகப்பெரும் 
வாசனைக்கிடங்காக 
உருமாறிவிட்டிருந்தது 
இந்த பாழாய்ப்போன சமுத்திரம் 

இனி என் செய்வேன்
உன் வாசம் களைய..

- அருண். இரா 


Saturday, June 4, 2011

காதல் - இரு நெறி.




காலம் நேரம் காணாது,
கலவி கொள்கின்றன -
கோபுரத்து சிற்பங்கள்.






ஒவ்வா மனதோடு 
பேசாமலேயே பிரிகிறேன் - 
அரைமணி முன் தோன்றிய 
பேருந்து காதலியை. 

வள்ளுவன் வழியில் -
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல.

 - சிவன்




Related Posts Plugin for WordPress, Blogger...