Wednesday, June 16, 2010

ஏன் இவர்கள் இப்படி ?






காட்சி 1:


வெகு நாள் கழித்து சென்னைக்கு ரயில் வழியாக பயணம் செய்ய நேரிட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தை ரயில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க, ரயில்வே பார்சல் ஆபீசின் தனித்துவம் நிறைந்த ஒரு தனி வாசம் நம்மை எப்போதும் வரவேற்கும். அன்றும் அந்த வாசனை எங்கள் ரயிலை வரவேற்த்தது. நம்ம சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒரு குட்டி இந்தியான்னே சொல்லிடலாம், அனைத்து மாநிலங்களின் எல்லா இன மக்களையும் இங்க பார்க்கலாம். இவ்வளவு பேரையும் பார்த்துட்டு, அவங்களோட இன்னும் ரெண்டு பேரை பார்க்க நேரிட்டது, அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.


ரயில் நின்றவுடன், ஸ்டேஷனை விட்டு வெளியே செல்லும் வழியில் மக்களோடு மக்களாய் முன்னேறி கொண்டிருந்தேன். சென்ட்ரல் ஸ்டேஷனில் நீங்கள் எல்லோரும் பார்த்திருக்கலாம், ரெண்டு பெரிய திரையில் ரயில்களின் நேர அட்டைவனை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அந்த திரைக்கு முன்னாடி இருக்கும் இருக்கைகளில் எப்போதுமே மக்களை காணலாம், பெரும்பாலும் வட இந்தியர்கள் குடும்பங்களோடு அமர்ந்திருப்பார்கள்...இப்படி ஒவ்வொரு விஷயமாக கவனித்துக்கொண்டு வரும்போதுதான் அந்த இருக்கைகளின் ஊடே அந்த சோகத்தையும் கவனிக்க நேர்ந்தது.


ஒரு இளம் பெண்(அ) தாய் மயக்கத்திலோ உறக்கத்திலோ தரையில் விழுந்து கிடந்தாள். அவள் அருகிலேயே ஒரு தவழும் கைக்குழந்தை. உடைகள் களைந்து மார்புகள் திறந்து கேட்பார் நாதியின்றி அந்த பெண் கிடக்க, குழந்தையோ இந்த கேடு கெட்ட உலகத்திற்கும் எனக்கும் துளி அளவும் தொடர்பில்லை என்று அதன் உலகத்தில் தனியாய் சிரித்து தானாய் விளையாடிக்கொண்டிருந்தது. எப்படி அங்கே வந்தாள், ஏன் அங்கே வந்தாள், எதையாவது பரிகொடுத்தவளா ? கூட வேறு யாராவது ?, இந்த விவரங்கள்
அங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது. அனால் அவள் அங்குதான் வெகு நேரமாய் கிடக்கிறாள்.


அவர் அவர் வேலையில் பறக்கும் இந்த உலகத்தில் ஏனோ தனியாய் கிடக்கும் இந்த பாவப்பட்ட ஜென்மத்தை கேட்க நாதிஒன்றுமில்லை. ஏதும் செய்ய இயலாதவனாய் இந்த உலகத்தின் பத்தோடு பதினொன்றாவது 'அது'-வாக நானும் வெளியேறுகிறேன். எதுவும் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியுடன்.


"என்ன பாவம் செய்தாலோ? ,
போதைல கிடக்கிறா...
எவன் பின்னாடியாவது ஓடியிருப்பா,
என்னவெல்லாமோ ஏசியது உலகம்,
உதவாமல் ஏசியவர்களை,
திட்டிக்கொண்டே வெளியேறுகிறேன் - நான்".
....
"நான்" என்பது இங்கு "நான்" மட்டுமில்லை...


காட்சி 2:

"நான்" - "அது"-வாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தேன். தாம்பரம் செல்லும் மின் ரயில் வண்டியை பிடிக்க அருகில் இருக்கும் பார்க் ரயில் நிலையத்திற்கு விரைந்த வேளையில்தான், அந்த இரண்டாவது நபரை பார்க்க முடிந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய உடன், வலப்பக்கம் திரும்பினால், புற நகர் செல்லும் ரயில்களின் நிலையம் தனியாக இருக்கும். அதை கடந்துதான் பார்க் ஸ்டேஷனுக்கு செல்ல முடியும். அது ஒரு நூறடி நீளமுள்ள நேர் சாலை. ஆட்டோக்களும், டாக்சிகளும் சவாரிகளை பிடித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த சாலையில்தான் பறந்துகொண்டிருந்தது.


அப்போது என்னை கடந்த ஒரு டாக்சியின் பின்புறம், ஏதோ தொற்றிக்கொண்டு செல்வதை உணர்ந்து பார்த்தேன். ஒரு சிறுவன் பத்து வயதிருக்கும், போலியோவால் பாதிக்கப்பட்டு மடிந்து போன கால்கள், மரப்பலகையில் சக்கரம் வைத்து, அதில் நகரும் சிறுவன். அந்த டாக்சியின் பின்னால் உள்ள BUMPER - ஐ பிடித்துக்கொண்டு, அதன் வேகத்திலேயே சென்று காரை தட்டி பிச்சை கேட்டு கொண்டிருந்தான். எங்காவது கொஞ்சம் பிசகினாலும் ஆபத்து. இப்படி அந்த இடத்தை கடக்கும் ஒவ்வொரு காராக பிடித்து கைகள் ஏந்திகொண்டிருந்தான். காரில் போகிறவர்கள் பணமாக போடுவார்கள் என்று நினைத்து கொண்டான் போல...


என் உடன் இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், கத்தினார்...


" டே, அறிவில்லையா உனக்கு ? காரை புடிச்சிக்கின்னு போறே...?
" அவனிடமிருந்து வந்த பதில்.. "போயா யோவ்..".


கடத்தியவர் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார், அவருடன்  "அது"வான "நானும்".




ஏன் இவர்கள் இப்படி ?
ஏன் "நான்" இப்படி ?
.....
"நான்" என்பது இங்கு "நான்" மட்டுமில்லை...

Saturday, June 12, 2010

பப்புவின் அட்ராசிட்டி - 4




------------------------------------------------------------------------------------

அப்பா : டேய், ஏன்டா அழுவுற...?
பப்பு : அம்மா அடிச்சுட்டாங்க..உம்ம்ம்....உம்ம்ம்...
அப்பா : இதுக்கு எல்லாமா அழுவாங்க ?
பப்பு : யோவ்..போயா..உன்ன மாதிரியெல்லாம் என்னால அடி தாங்க முடியாது...!!!

------------------------------------------------------------------------------------

பப்பு : தாஜ் மகாலுக்கு பச்சை கலர் பெய்ண்ட்டு அடிச்சா என்ன ஆகும்....?
அப்பா : தெரியலையே...
பப்பு : கொஞ்சம் செலவாகும்.

------------------------------------------------------------------------------------

பப்புவின் தத்துவம் - 1045

காதலிக்கிற பொண்ண காதலின்னு சொல்லலாம்...
கல்யாணம் பண்ண போற பொண்ண கல்யாணி-ன்னு சொல்ல முடியுமா...?
யோசிங்க...யோசிங்க...

------------------------------------------------------------------------------------

பப்பு (தன் குட்டி தோழியிடம்...) - நீதான் எனக்கு WIFE-ஆ வருவேன்னு என்னோட க்ளாஸ் டீச்சருக்கு முன்னாடியே தெரிஞ்சுருக்கு...!!!

தோழி : எப்படி சொல்ற ?

பப்பு : நேத்து கிளாஸ்ல சொன்னாரு, பன்னி மேக்கதான் நீ லாயக்குன்னு..!!!

------------------------------------------------------------------------------------

ப்ளாஷ் நியூஸ் :

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி, மருத்துவமனையில் அனுமதி...

பப்பு : மக்களே எல்லாரும் அவர் சீக்கிரம் குணமாகனும்னு வேண்டிக்கங்க,
ஏன்னா..அவர்கிட்ட இன்னும் நாலு சி.டி இருக்காம்.

------------------------------------------------------------------------------------

டீச்சர் : பசங்களா, நீங்க எல்லாரும் நல்லா படிச்சு நம்ம நாட்டுக்கு நல்ல பேரு வாங்கி தரணும்.

பப்பு : ஏன் இந்தியா-ங்கிற பேரு நல்லாதான இருக்கு ???

------------------------------------------------------------------------------------

பப்பு : அம்மா, என்னோட ப்ரெண்டு வர்றான், சீக்கிரம் இந்த காஸ்ட்லி ஐட்டம்ஸ் எல்லாத்தையும் உள்ள கொண்டு போய் வைங்க...!!!

அம்மா : ஏன்டா, உன் ப்ரெண்டு ரொம்ப திருடுவானா ?

பப்பு : அதில்லமா, இதையெல்லாம் பார்த்தான்னா அவனோடதுன்னு கண்டு பிடிச்சுடுவான்...

------------------------------------------------------------------------------------

பரீட்சை எழுதியவுடன்...

பப்பு : டே நான் ஒண்ணுமே எழுதல...

பப்பு ப்ரெண்டு : நானும் தாண்ட..

இன்னொரு ப்ரெண்டு : டே நானும் தாண்ட ஒண்ணுமே எழுதலை...

பப்பு : அடப்பாவி நாய்களா...போச்சு போ, நாம எல்லாரும் ஒன்னா காப்பி அடிச்சோம்னு மிஸ் கொல்ல போறாங்க...!!!

------------------------------------------------------------------------------------

டீச்சர் : ஒரு பெண் வண்டி ஒட்டிக்கொண்டு போகிறாள்..., பப்பு இத அப்படியே இங்கிலீஷ்ல சொல்லு...

பப்பு : PEN DRIVE

------------------------------------------------------------------------------------

எல்.கே.ஜி வகுப்பில்....

டீச்சர் : இங்க யாருக்கெல்லாம் NUMBERS தெரியும்..
பப்பு மட்டும் கை தூக்குகிறான்..

டீச்சர் : வெரி குட்.
சொல்லு, நாலுக்கு அப்புறம் என்ன வரும்.

பப்பு : ( கை விட்டு எண்ணிக்கொண்டு ) அஞ்சு.

டீச்சர் : வெரி குட்..ஏழுக்கு அப்புறம் என்ன வரும்..?

பப்பு : ( மீண்டும் கை விட்டு எண்ணிக்கொண்டு ) எட்டு.

டீச்சர்: வெரி குட்.உனக்கு யாரு இதெல்லாம் சொல்லி கொடுத்தாங்க..

பப்பு : என்னோட அப்பா மிஸ்.

டீச்சர் : ரொம்ப நல்ல அப்பா....சரி, பத்துக்கு அப்புறம் என்ன வரும் சொல்லு...?

பப்பு : கொஞ்சமும் யோசிக்காமல், JACK மிஸ்.


------------------------------------------------------------------------------------

பப்பு : ஏண்டா உங்க அப்பாவுக்கு, ஆக்ஸிடன்ட் ஆன விஷயத்தை என்கிட்ட சொல்லலை...?

ப்ரெண்டு : சாரிடா பப்பு, சொல்ல மறந்துட்டேன்...

பப்பு : போடா துரோகி, எங்கப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆனா , உன்கிட்ட சொல்றனா பாரு...

------------------------------------------------------------------------------------

கிராமத்தில் பப்பு :

அந்த கிராமத்துக்கு அன்னைக்கு கலெக்டர் வந்திருந்தார்...

கலெக்டர் எல்லார்கிட்டயும் குறைகளை கேக்கும்போது, நம்ம பப்பு வேக வேகமா கலெக்டர் கொட்ட போனான்...
(பல தமிழ் சினிமாக்களில் வருவது போல...)

பப்பு (சத்தமாக) : கலெக்டர் சார்ர்ர் , மொதல்ல எங்க ஊருக்கு ஒரு பாலம் கொண்டு வாங்க...

கலெக்டர் ( தலையை சொரிந்துவிட்டு) : இந்த ஊருலதான் ஆறே இல்லையேப்பா, அப்புறம் எதுக்கு பாலம்..

இப்ப பப்பு தலையை சொரிந்துகொண்டே.. : அப்படின்னா, மொதல்ல ஒரு ஆற கொண்டு வாங்க...!!!! (எப்பூடீ...)

கலெக்டர் : ???

------------------------------------------------------------------------------------

இது போனஸ் ஜோக் ..என்ஜாய்.......


கணவன் : இன்னைக்கு நைட் என்ன டின்னர் டார்லிங் ?

மனைவி : (வெறுப்புடன் ) ம்ம்....விஷம்..

கணவன் : ஒ.கே எனக்காக வெய்ட் பண்ணவேண்டாம், நீ சாப்பிட்டு தூங்கு... :)

------------------------------------------------------------------------------------

இது பப்புவின் பழைய காமெடி...இருந்தாலும் ரிப்பீட்டு....

தாத்தா : டே பப்பு, உங்க மிஸ் வர்றாங்க...ஓடி போய் ஒளிஞ்சுக்கோ....

பப்பு : அய்யோ தாத்தா..நீ போய் ஒளிஞ்சுக்கோ....நீ செத்துட்டேன்னு சொல்லித்தான் ஒரு வாரமா லீவு போட்டு வீட்டுல இருக்கேன்...

------------------------------------------------------------------------------------

அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்......
- ஜொள்ளன் பப்பு.

Wednesday, June 9, 2010

பூண்டாக் செயின்ட்ஸ் - Boon Dock Saints (1999)


இந்த படத்தை பார்த்த உடன் தோன்றியது, க்வெண்டின் டராண்டினோ இந்த படத்தை எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பார் என்றுதான், ஏன்னா படம் கிட்டத்தட்ட அவர் ஸ்டெயிலில் தான் இருந்தது.. (உடனே க்வெண்டின் ரசிகர்கள் சின்ன சின்ன பசங்களோட எல்லாம் க்வேன்டினை கம்பேர் பண்ணுவதா ?, என்றெல்லாம் சண்டைக்கு வரக்கூடாது...)






1999-இல் TROY DUFFY-ங்கிற டைரக்டர் இயக்கி வெளி வந்த ஆக்ஷன் க்ரைம் திரைப்படம்தான் இந்த பூண்டாக் செயின்ட்ஸ்.
படத்தோட ஒன் லைன் ஸ்டோரி ரொம்ப சிம்பிள் மச்சான்ஸ், தாங்கள் கெட்டவர்கள் என நினைக்கும் அனைவரையும்
கொல்ல முற்படும் இரு சகோதரர்கள். ரொம்ப ஸ்டைலிஷான ஒரு ஆக்ஷன் த்ரில்லர். இந்த படம் திரையில் வெளியிட்ட போது, தோல்வி அடைந்து பின்னர் டி.வி.டி.யில் சக்கை போடு போட்ட படம். CULT FILM என சொல்லப்படும் ஒரு சாராருக்கு மட்டுமே பிடித்ததாக இந்த படம் அமைந்துவிட்டது.

கான்னோர், மார்பி ஐரிஷ் நாட்டை சேர்ந்த கத்தோலிக சகோதரர்கள்.வாரா வாரம் சண்டே ஸ்கூல் எனப்படும் கிருத்தவ மத போதனைகளுக்கு தவறாமல் செல்பவர்கள். அவ்வளவு நல்ல பசங்க. ஒரு நாள் நண்பர்களுடன் புனித.பாட்ரிக்(ST.PATRICK) தினத்தை பாரில் கொண்டாடி கொண்டிருக்கும்போது, ஊருக்குள் புதிதாக ரவுடியிசம் செய்ய வந்திருக்கும் ரஷ்ய மாபியா கும்பலால் தாக்கப்படுகின்றனர் சகோதரர்களும் அவருடைய நண்பர்களும். அந்த மாபியா கும்பலில் வெறும் மூனே மூணு தடி தாண்டவராயன் மட்டும் தான் என்பதால் சகோதரர்களும், 
அவர்களுடைய  நண்பர்களும் ரஷ்ய கும்பலை தாக்க ஆரம்பிக்கின்றனர்.


[கட்]



மறுநாள், ஒரு குப்பை தொட்டி அருகில் மூன்று சடலங்கள் கிடக்க, நம்ம ஸ்பைடர் மேன் வில்லன் வில்லம் DAFOE (தமிழ்ல எப்படி அடிக்குறதுன்னு தெரியலப்பா....அட்ஜீஸ் பண்ணிக்கோங்க :) ) இந்த கொலைகளை விசாரிக்க வருகிறார்.சடலங்களையும், இடத்தையும் ஆராயும் வில்லம், இது தற்காப்புக்காக நிகழ்த்தப்பட்ட கொலைகள் என்று முடிவுக்கு வருகிறார்.

அன்றே சிறிது நேரத்திற்க்கெல்லாம், சகோதரர்கள் காவல் நிலையத்திற்க்கு சென்று உண்மையை ஒப்பு கொள்கின்றனர். அப்படியே கொசுவத்தி சுருள் வச்சு ப்ளாஷ் பேக்கில் என்ன நடந்தது என்பதும் காண்பிக்கப்படுகிறது. பாரில் நடந்த சண்டைக்காக மீண்டும் பலி வாங்க வரும் ரஷிய தடியன்களை சகோதரர்கள் போட்டு தள்ளும் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. ரஷ்ய மாபியா கும்பலை சேர்ந்த மூன்று பேரை இவர்கள் கொன்றிருப்பதால், போலீஸ் இவர்களை ஹீரோக்களாக பாவிக்கிறது.




அதனால் அன்றே விடுதலை செய்யப்படும் சகோதரர்கள், வெளியில் இருக்கும் பத்திரிக்கைகாரர்களுக்கு தெரியாமல் செல்ல வேண்டும் என்று அன்று இரவு மட்டும் லாக்கப்பில் கழிக்கின்றனர். அங்கதான் ஒரு ட்விஸ்ட்டு. இருவர் கனவிலும் வரும் ஏதோ ஒரு சக்தி அவர்களை தீமைக்கு எதிராக தூண்டிகிறது(?).

இங்கதான் ராக்கோ, அப்படிங்கிற நண்பர் (செம இன்டரஸ்டிங்கான கேரக்டர் மச்சான்ஸ்) சகோதர்களோட கூட்டு சேருகிறார். ராக்கோவுக்கு ஊருக்குள் இருக்கும் ரவுடி, கேப்மாரி, சோமாறி, பிஸ்தா, பேட்டை பக்கிரி, மாபியா பாஸ், முடிச்சவிக்கி, கஞ்சா குடிக்கி என எல்லோரின் ஜாதகமும் அத்துபடி. எனவே சகோதர்களின் இந்த தீமைக்கு எதிரான போரில் அவரும் சேர்ந்து கொள்கிறார்.



இங்கதான் படம் டாப் கியர் போட்டு ஆரம்பிக்குது.
மூன்று பேரும் ஊருக்குள் இருக்கும் ஒவ்வொரு
பெரிய தலையாக ப்ளான் போட்டு அனாசயமாக போட்டு தள்ளுகின்றனர்.

எடிட்டிங்கிலும், திரைக்கதையிலும் ரவுசு கட்டி ஆடியிருக்காங்க.
உதாரணத்துக்கு ஒரு காட்சி இப்படிதான் நகரும்.
ராக்கோ, யாராவது ஒரு
பெரும் புள்ளியை பற்றி பேசுவான். [கட்]
அடுத்த காட்சி, வில்லம்-க்கு கொலை நடந்ததாக போன் வரும். [கட்]
சம்பவ இடத்துக்கு விரையும் (?) வில்லம், அங்கிருக்கும் ஒவ்வொரு ஆதாரத்தையும் வைத்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்க, [கட்]
திரையில் அந்த காட்சிகள் காட்டப்படும். NON LINEAR EDITING DONE WITH A CLASSIC TOUCH.





இப்படி யாருக்கும் தெரியாமல் சகோதரர்கள் மர்ம தேசம் கருப்பு சாமி போல எல்லாரையும் போட்டு தள்ள, போலீசும் மாபியா கும்பல்களும் இவர்களை நாலா பக்கமும் தேடுகின்றனர். வேறு வழியே இல்லாமல் மாபியா கும்பல் தலைவன் ஒருவன் இவர்களை போட்டுத்தள்ள பல வருடங்களாக சிறையில் இருக்கும் ட்யூஸ்[DUCE] என்ற ஒரு கொடூர கொலைகாரனை(?) வெளியே கொண்டு வருகிறான். ட்யூசும், நம்ம சகோதரர்களும் மோதும் நேரடி காட்சிகள் பர பர பட்டாசு...

அதற்க்கப்புறம் வரும் ஒரு கடைசி ட்விஸ்ட்டு, ஒரு துப்பாக்கி சண்டை என படத்துக்கு சுபம் போடுகின்றனர். WILLAM DAFOE சில காட்சிகளில் மொக்கை போட்டாலும் பல காட்சிகளில் மனுஷன் நடிப்பில் கலக்கிவிடுகிறார்.

மொத்தத்தில் பூன்டாக் செயன்ட்ஸ் ஒரு அட்டகாசமான ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் மச்சான்ஸ்.
பார்த்துட்டு சொல்லுங்க மச்சான்ஸ்.


Friday, June 4, 2010

ஒரு மூட்டை புண்ணியம்.

அன்பு மச்சான்ஸ்...

ஒரு நல்ல விஷயத்துக்காக இந்த பதிவு...

ஆனால் சென்னையில் உள்ள நண்பர்களுக்கு மட்டும்... மற்ற மச்சான்ஸ், உங்களுக்கு சென்னையில் நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் யாராவது இருந்தால் இந்த தகவலை தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்...




ஸ்வர்க் - இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.
(உடனே போயிடாதீங்க...என்னவென்று முழுதாக படித்துவிட்டு செல்லவும்...)

பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இளைஞர்ஸ் & இளைங்கிஸ் சேர்ந்து, வசதியில்லாத குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்படும் ஒரு தொண்டு நிறுவனம் தான் இந்த ஸ்வர்க்..

விஷயம் இதுதான் மச்சான்ஸ்...ரொம்ப சிம்பிள்.

வரும் ஞாயிற்று கிழமை, இந்த நிறுவனத்தை சார்ந்த நண்பர்கள், புத்தகங்களை சேமிக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்த விருக்கின்றனர். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான் மச்சான்ஸ் , உங்களிடம் உபயோகப்படுத்திய, பழைய பாட புத்தகங்கள் இருந்தால் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள நண்பர்களிடம் தகவல் தெரிவியுங்கள்.கல்லூரி, உயர்நிலை, இடைநிலை, தொடக்க கல்வி  எந்த புத்தகமாய் இருந்தாலும் தெரிய படுத்தவும்.

அவர்கள் உங்கள் வீடு தேடி வந்து அந்த புத்தகங்களை பெற்று கொள்வர்.
வசதி வாய்ப்பில்லாத பல நூறு ஏழை மாணவர்களின் படிப்புக்கு உங்களின் புத்தகங்கள் சென்றடையும். இந்த நல்ல விஷயத்தை செய்ததற்கு கண்டிப்பாய் உங்களுக்கு ஒரு மூட்டை நிறைய புண்ணியம், அதைவிட ஒருவருக்கு உதவினோம் என்ற மனத் திருப்தி கண்டிப்பாய் உங்கள் மனதை நிறைய செய்யும் மச்சான்ஸ்.

இதுவரை மச்சான்ஸில் ஒட்டு போட சொல்லி நாங்கள் கேட்டதில்லை, இந்த தடவை - இந்த விஷயம் நிறைய பேரை சென்றடைய உதவுங்கள் மச்சான்ஸ். அட்வான்ஸ் தாங்க்ஸ்பா..

உங்கள் வீட்டு முகவரியை மெயில் அனுப்பவோ, இல்லை தொலை பேசியில் தொடர்பு கொள்ளவோ....


Mail :    theswarg@gmail.com
Or call  Mr.Thomas @ 9840595557
           Mr. Ragavendra @ 9884744672


ஏதோ நம்மளால முடிந்த ஒரு நல்ல விஷயம், ஒரு ஒரு மெய்லோ அல்லது போன் கால்தான்..யோசிக்காமல் செய்யவும் மச்சான்ஸ்.
ஸ்வர்க் பற்றி மேலும் தெரிந்துகொள்ள....

Swarg Team.
SWARG Website:- http://theswarg.org
SWARG Blog:- http://theswarg.blogspot.com/
SWARG Photos:- http://picasaweb.google.co.in/theSwarg
SWARG SMS Channel:- http://labs.google.co.in/smschannels/subscribe/theSwarg

                                     - 
நன்றி மச்சான்ஸ்.
Related Posts Plugin for WordPress, Blogger...