Wednesday, October 2, 2013

சாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு!




தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த 
விலைவாசியேற்ற பழியையும் 
ஒற்றை ஆளாய் தோளில் ஏந்தி நிற்பவன். 

மன்மோகன்சிங்கிற்கு அடுத்தபடியாய் 
மிடில் கிளாஸ் மக்களின் அர்ச்சனைகளை 
வாங்கி கட்டி கொண்டவன். 

இளநீர் நாற்பது ரூபாய் ஆனதுக்கும்
ஈ.சி.ஆர் வீடுகள் கோடியை தொட்டதுக்கும் 
இவனே முழு பொறுப்பு.

'ஹே dude' என்று நீலப்பல் ஹெட்போனில்  
'சார் ஸ்கோர்?' எனக்கேட்டு 
சகப்பேருந்து வியர்வைவாசிகளின் 
தீப்பார்வைகளால் தினம்  
சுட்டெரிக்கப்படுபவன். 

இவன் ஆட்டோ அண்ணாச்சி உயர்த்தும் 
ஐந்து ரூபாய்க்கு பேரம் பேச மாட்டான். 
பேருந்து நடத்துனரிடம் ஆறு ரூபா சீட்டுக்கு 
ஐநூறு ரூபாய் தாளை நீட்டி கடுப்பேத்துவான். 

ஆன்சைட் போக இவன் படும் அவஸ்தைகளை 
எந்த டிவி சீரியலும் சொல்லப்போவதில்லை. 

ஆறு மாதத்திற்கு ஒருமுறை அப்ரைசல் என்னும் 
அனல் பரீட்சையை தாண்டாமல் இவனுக்கு 
கிடைக்கபோவதில்லை ஐபாட்களும் ஐபோன்களும். 

நடுநிசி நாய்கள் படமும், பவர்ஸ்டார் பேட்டியையும் 
ஒரு சேர பார்ப்பது போல் இருக்கும் 
இவனது ஒத்தைக்கு ஒத்தை  மேனேஜர் நேர்காணல்கள். 

அரை லட்சம்  சம்பளம் வாங்கினாலும் 
பெத்தக்கடனுக்கு வட்டி கட்டிவிட்டு 
இவன் வாங்கும் வெளிக்கடன்கள் 
வெளியில் தெரிவதில்லை. 

பீட்சா கடைகளிலும் காபி டே க்களில் 
மட்டுமே இவனை பார்த்த உங்களுக்கு.. 
'சாம்பார் செய்வதெப்படி' என 
கூகுளில் கற்று இவன் 
கை சுட்டுக்கொண்ட கதைகள் 
யாருமே எழுதாதவை. 

எம்பஸி வரிசையில் மட்டுமில்லை 
தன்பசி தீர்க்க அம்மா மெஸ் வரிசையில் 
கூட அவ்வபோது தட்டுபடுவான். 

ஞாயிறு இரவுகளில்
ஊரே  'நீயா நானா' ரசிக்கையில் 
ஊருக்கு வெளியே 'ஜாவா'வே துணையாய் 
இவன் விசைப்பலகை சப்தங்கள் ஏனோ 
நம் செவிகளை தீண்டுவதே இல்லை. 

ஒய்வு நேரத்தில் இவன் 
சத்யமிலோ  டிஸ்கோதே களிலோ 
திரிந்து கொண்டிருப்பான் என்று 
நினைக்கையில் 

சாலையோர தேநீர்க்கடையில் 
தமிழ் இலக்கியம் பற்றி கூட 
தோழர்களுடன் தர்க்கமிட்டுக்கொண்டிருப்பான்  
என்ற நிகழ்வே கற்பனையில் கூட உதிர்க்காதவை.

நியாயம் பேசும் 
நடுத்திர வர்க்கம் தங்கள் 
நாலாம் வகுப்பு மழலையிடம் 
சொல்லுவர் " செல்லம் நல்லா கம்ப்யூட்டர் 
படிச்சு, வளர்ந்த பிறகு அமெரிக்கா லாம் போகணும்!" 

​-  இரா.அருண்

Friday, August 17, 2012

இருளினுள்...



உன்னுடன் சேர்ந்த 
மயக்கங் கொண்ட 
பொழுதுகள் - சிம்பொனி
இரவின் சிலிர்ப்புகள் !

நம் தனிமை யூடல்கள் 

கவிதை காதல்கள்
விரல்கள் கோர்த்த 
இருபாத நடை,
விழிகள் பிரியா
தனிநிழல் சிறை !

மௌன மொழிகள் 

முத்தப் போர்கள் !
'இச்' - உயிர்மெய், முதல் பாதம்.
தொடர்க,
'ப்ச்' - மெய்யுடன் மெய் !

இறுக்கம் அடர்ந்த 

மூச்சுக் காற்றில் 
கவனம் சிதறி 
இயற்கை பிரளும் !

ஸ்பரிச கோடுகள் 

இறுக்கம் சேர்க்க 
விழிமூடினும் பொருள் 
தேடுது - இருள் 
காட்டிலொரு கலவிக் காதல்.

 - சிவன் 

Wednesday, February 15, 2012

உன் இன்மை




புகைப்படங்கள் நிரம்பிய படுக்கையறை
இசைத்தட்டுகள் இறைந்து கிடக்கும் ஊஞ்சல் 
ஸ்பரிசங்களை சேகரித்த அலமாரி 
உரையாடல்கள் உறைந்திருக்கும் சுவர்கள்
.
.
என்னை விட உன் வெறுமையை 
எப்படி தாங்கப்போகிறதோ
நம் கற்பனை வீடு.

*****

மிரளச்செய்யும் அன்பு 
மிரட்சி கலந்த ஆளுமை 
எது நீ? எது நான் ?
மாறிப் போவதறியாமல் 
முழித்து விழிக்கையில் 
கடந்து விடுகிறது 
இன்னுமோர் இரவு!

*****

மழை விரும்பா தாவரம் 
எரிதழல் தீண்ட எஸ்கிமோ 
உன் விலகலில் நான். 
*****                                                                         - அருண்.இரா

Monday, June 13, 2011

வோட்கா இரவுகள் - 00 : 01



துண்டு துண்டாய் 
என் சதைப்பிண்டத்தை நானே 
கூறிட்டுக் கொண்டிருந்தேன்.. 

இறுதிச்சொட்டு 
உயிரிடமிருந்து 
பீறிட்டு பெருக்கெடுக்க
ஆரம்பித்தது அழுகை..  

தந்தையின் அஸ்தியைக் கரைக்கும் 
தனயனைப்போல் 
மிகச் சிரத்தையுடன் மிச்சமிருக்கும் 
என் கருநீல உடலை
நீர்த்திவளைகளிலான 
கடலில் 
கரைத்துக்கொண்டிருந்தேன்... 

உள்ளங்கையில் ஜனித்து 
உள் நரம்பெங்கிலும் 
வியாபித்திருந்த உன் வாசம் 
போக்கும் ஒரு வகை 
வேள்வி தான் அது.

நீர்த்தொட்ட நொடியினில் 
ஒரு துளியென தொடங்கி..
தீயென ப்பரவி
அண்டத்தின் மிகப்பெரும் 
வாசனைக்கிடங்காக 
உருமாறிவிட்டிருந்தது 
இந்த பாழாய்ப்போன சமுத்திரம் 

இனி என் செய்வேன்
உன் வாசம் களைய..

- அருண். இரா 


Saturday, June 4, 2011

காதல் - இரு நெறி.




காலம் நேரம் காணாது,
கலவி கொள்கின்றன -
கோபுரத்து சிற்பங்கள்.






ஒவ்வா மனதோடு 
பேசாமலேயே பிரிகிறேன் - 
அரைமணி முன் தோன்றிய 
பேருந்து காதலியை. 

வள்ளுவன் வழியில் -
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல.

 - சிவன்




Thursday, February 17, 2011

முத்தம் குறித்த உரையாடல்களில்...




ஒரு காதலர் தின முன்னிரவில் 
முத்தம் பற்றிய ஆத்மாநாம் கவிதையில் 
தோழமையாய் தொடங்கியது 
நம் உரையாடல்.

முத்தம்...
ஒரு பெண் 
தன் பெண்மையை உணர்ந்து 
மெய் சிலீர்த்திடும் 
சுதந்திரத்தருணம்! 
என்றாய் நீ.

ஒரு பெண்பால் 
வெண்பா வார்த்த நிமிடம் !

அதுவே ஆணுக்கு 
இந்த இதழ்ப்பூட்டு
மனப்பூட்டாய் மலர்ந்து 
மணப்பூட்டாய் உருமாறி
விடுதலைக்கே வெடிகுண்டு 
வைக்குதே! 
வேண்டுமென்றே விதண்டாவாடினேன்..

முத்த நினைவுகளுடன் 
மௌனித்தோம்..
------------------------------------------

நீ எண்ணியவை..

முத்தம்!

அன்பின் வெளிப்பாடு
காதலின் கடைக்குட்டி  
நினைவுக்கோர்வையின் அகவரிசை 
ஆணாதிக்கத்தின் முற்றுப்புள்ளி
யதார்த்தத்தை மீறிய கற்பனை.

~~~~

முத்தத்திற்கும் உண்டு
 இடம் பொருள் ஏவல் 
நெற்றி - பாசம் 
கைகள் - நெருக்கம்
இதழ்கள் - வெட்கம்.

சவ வீட்டிலும் 
சத்தமில்லா தெருக்களிலும் 
பகிரப்படும் முத்தங்கள் 
வெவ்வேறானவை..

~~~~

~~~~

ஏங்கி நிற்கும் 
இதய வெற்றிடத்தை 
எதிர்பாரா ஒற்றை 
முடிவிலி முத்தம்  
மலர்களால் நிரப்பும்.
--------------------------------------------------

 நான் எண்ணியவை..

முத்தம்!

ஒரு நொடிக்கொண்டாட்டம் 
காமத்தின் கதவுத்தாழ்பாள் 
ஏவாளின் ஆப்பில்
பெண் உணர்தலின் முதற்புள்ளி
கற்பனையை மீறிய யதார்த்தம். 

~~~~

முத்தம்!
கண் மூடி கால் தூக்கியும் கொடுக்கலாம் 
கட்டியணைத்து சத்தமின்றியும் சங்கமிக்கலாம்
எட்ட நின்று கையில் கொடுத்து 
காற்றில் தவழவும் விடலாம்..
கண்டம் தாண்டி கைபேசியை 
எச்சில் படுத்தியும் உரைக்கலாம்..

~~~~ 

தீதும் நன்றும் பிறர் தர வாரா 
முத்தமும் அன்பும் தனக்குளிருந்து வாரா..  
தடுத்து பழகாதீர்கள் 
கொடுத்து பழகுங்கள் 
முத்தங்களை! 
---------------------------------------

 மௌனம் கலைந்து
ஓராயிரம் விருப்பங்கள் குவிந்தும் 
ஒன்றுமே எண்ணா வண்ணம் 
 அப்புறம் ? என்ற 
மிகச்சிறிய சொல்லுடன் 
உறைந்து விடுகின்றன நம் 
உள்ளக்கிடக்கைகளும்..
உரையாடல்களும்..  


நன்றி !!
 'முத்தக்கவிதைகள்' என்னும் தலைப்பில் காட்சி வலைப்பூ வெளியிட்ட பதிவு

Monday, October 18, 2010

பேட்டில் ராயேல் Battle Royale (バトル・ロワイアル Batoru Rowaiaru - 2000




குடும்பம் குட்டி குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டிய ஒரு உன்னத காவியம், இந்த ஜப்பானிய திரைப்படம். உங்களுக்கு தக்காளி சாஸ் பிடிக்குமா? இந்த படத்தில் பல காட்சிகள் அப்ப உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்..

ஓகே ஓகே கொஞ்சம் சீரியஸா பேசலாம். :)

பேட்டில் ராயேல்(Battle Royale) 2000-ம் வருடம் ஜப்பானில் வெளிவந்த ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். படத்தோட கதையை பாக்குறதுக்கு முன்னாடி, இந்த படத்த பத்தின பிரபல விமர்ச்சகர்களோட கருத்தை பார்ப்போம்.

"This is a heart-stopping action film, teaching us the worthy lessons of discipline, teamwork, and determination, but wrapping them up in a deliberately provocative, shockingly violent package. ""

படத்த பத்தி ஒரு போர்த்துகீசிய விமர்சகர் இன்னா சொல்றார்னா,

"Os intertítulos e o excesso de flashbacks comprometem um pouco o ritmo do filme, mas, de modo geral, a ação é muito bem conduzida e os personagens, satisfatoriamente desenvolvidos" - (ஒன்னும் புரியலனா free வுட்ருங்க, ஏன்னா எனக்கும் ஒன்னும் புரியல..)



ரத்தத்திற்கு பயப்படுபவர்கள், வீக் பாடிஸ், இளகிய நெஞ்சம் படைத்தவர்கள், குழந்தைகளை விரும்புவர்கள் - மச்சான்ஸ், இந்த படமும் பதிவும் உங்களுக்கானது அல்ல, நம்ம அடுத்த பதிவுல பாப்போம், வருகைக்கு நன்றி.
மத்த மச்சான்ஸ் பாலோ மீ..

ஒரு நூற்றாண்டின் விடியலில் ஜப்பான் தேசத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படுகிறது, பெரியவர்களுக்கு வருங்கால சங்கதியினரின் மீதான நம்பிக்கையே போய்விட, அவர்களை ஒழுங்கு படுத்தும் பொருட்டு புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுகின்றனர். அதுதான் Millenium Education Reform (அ) B .R ACT - Battle Royale Act.


அது என்ன அப்படி ஸ்பெஷல் சட்டம் என்றால், ஏதோ ஒரு பள்ளியின், ஏதோ ஒரு வகுப்பு மாணவர்களை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும், அவர்கள் அனைவரும் ஆள் அரவம் இல்லாத ஒரு தனி தீவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கே அவர்கள் ஒரு கேம் விளையாட வேண்டும். "ப்பூ அவ்வளவுதானா..." என்பவர்கள் பின் வரும் விளையாட்டின் விதிகளை படிக்கவும்.

--இந்த விளையாட்டு மூன்று நாட்கள் நடைபெறும், தீவுக்குள் எங்கு வேண்டுமென்றாலும் போகலாம்.
--இந்த விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் மற்றவர்களை கொல்ல வேண்டும், நீங்கள் படித்தது சரிதான், மற்ற அனைவரையும் கொல்ல வேண்டும்.கடைசியில் இருக்கும் ஒருவரே வெற்றி பெற்றவர், அவர் மட்டும் வீட்டுக்கு போகலாம்.
--ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மீதம் இருந்தால் அனைவரும் கொல்லப்படுவர்.
--ஒவ்வொருவர் கழுத்திலும் ஒரு உலோக பட்டை உண்டு, அதை வைத்து அவரை ரிமோட் மூலம் கொல்ல முடியும்.
--முழு தீவும் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது, அவ்வப்போது ஒரு பகுதி டேஞ்சர் ஜோன் என்று அறிவிக்கப்படும், அப்போது அந்த பகுதிகளில் இருப்பவரின் காலர் பட்டைமூலம்  அவர் கொல்லப்படுவார்.
--ஒவ்வொருவருக்கும் ஒரு பை கொடுக்கப்படும். அதில் கொஞ்சம் உணவு, கொஞ்சம் தண்ணீர், தீவின் வரைபடம் மற்றும் ஏதேனும் ஒரு ஆயுதம் இருக்கும்.



ஷுயா நானாஹரா நண்பர்களுடன் (ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ) பள்ளி மூலம், சுற்றுலா செல்ல, அனைவருக்கும் மயக்க வாயு செலுத்தி, அரசாங்கம் அவர்களை அந்த தனி தீவில் சேர்க்கிறது. அனைவரும் மயக்கம் தெளிந்து எந்திரிக்க, அனைவரின் கழுத்திலும் உலோக பட்டை அணிவிக்கப்படிருக்கிறது. ஒருவருக்கும் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவர்களின் பழைய ஆசிரியர் ஒருவர் உள்ளே நுழைகிறார். இவர்தான் இந்த கேம்ஷோவை நடத்த போகிறவர்.

நானாஹரா- வின் வகுப்பு தோழர்கள் நாற்பது பேர், அத்துடன் மாற்றம் ஆகி வந்த வேறு பள்ளி மாணவர்கள் இருவர் என்று மொத்தம் நாற்பத்தி இரண்டு பேர் இந்த கேம் ஷோவிற்கு வருகின்றனர். அனைவருக்கும் விதிகள்
சொல்லப்பட்டு, ஆளுக்கு ஒரு பை கொடுத்து அனுப்பி வைக்கிறார் ஆசிரியர். விதிகள் சொல்லும்போதே ஒரு பெண் எதிர்த்து பேச, அவள் அங்கேயே கொல்லப்படுகிறாள். அதே போல் கழுத்து பட்டையின் செயல்பாட்டினை
விளக்க, ஒரு மாணவனின் தலையையும் வெடிக்க வைக்கிறார் ஆசிரியர்.

மீதம் உள்ள நாற்பது பெரும் , வெளியே செல்ல, மூன்று நாட்கள் என்ன நடக்கிறது, எத்தனை பேர் கொல்லப்படுகின்றனர், கடைசியில் யார் ஜெயித்தார் என்பதே கதை.



ஒரு சிலர் மற்றவர் அனைவரையும் கொன்று விட வேண்டும் என துடிக்க, ஒரு சிலர் யாரையும் கொல்லாமல் மூன்று நாட்களை உயிருடன் கடக்க முயற்ச்சி செய்கின்றனர், படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை,ஸ்பெஷல் எபக்ட்ஸ் மற்றும் இயக்குனர். படத்தில் வரும் லைட் ஹவுஸ் காட்சி ஒன்றே இதற்கு போதும். மனுஷன் அந்த சீன்ல பூந்து விளையாடி இருப்பார். ஒருவரை மட்டுமே கதை மையம் கொல்லாமல் நாற்பது பேரையும், அவர்களின் செயல்களையும் காண்பிக்க திரைக்கதை முயற்சி செய்திருக்கிறது.

ஒரு அல்டிமேட் த்ரில்லர் படம் வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

படத்தின் ட்ரைலர் இதோ.


Thursday, October 14, 2010

சிட்டி ஆப் காட் - City of God - Cidade de Deus - 2002

வெகு நாள் கழித்து ஒரு பதிவு.. !!!


அதே போல் நான் வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த படத்தை பற்றிதான் இந்த பதிவும். படத்தின் பெயர் - City of God . 2002 இல் வெளி வந்த இந்த பிரேசிலிய நாட்டு க்ரைம் மாபியா திரைப்படத்தை பெர்னாண்டோ மீரல்ஸ் என்பவர் இயக்கியிருக்கிறார்.

பல இடங்களில் "பார்க்க வேண்டிய படங்களின்" வரிசையில் இந்த படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அதனால்தான் மச்சான்ஸ், ரொம்ப நாட்களாக இந்த படத்தை பார்க்க ஆர்வம். நம்முடைய நாட்டில் கொஞ்சமும் எதிர் பார்க்க முடியாத கதை மற்றும் கதைக்களம்.



பிரேசில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது கதை. ரியோ நகரத்தின் புறநகரத்தில் அமைந்திருக்கும் ஒரு புதிய குடியிருப்பு பகுதியின் பெயர்தான் "சிட்டி ஆப் காட்". இந்த சிட்டி ஆப் காட் நகரத்தின் தெருக்களில் ஓடி விளையாடும்(????) சிறுவர்களை பத்திதான் படம். முழுப்படமும் ராக்கெட் என்ற சிறுவனை முதன்மை பாத்திரமாக நிறுத்தி (இவர் இந்த படத்தின் ஹீரோ இல்லை...), அவனின் கண்ணோட்டத்தில் ஆரம்பித்து முடிகிறது.

தடதடக்கும் இசையுடன் தொடங்குகிறது படத்தின் முதல் காட்சி. சமைப்பதற்காக கட்டி வைக்கப்பட்டிருத்த கோழி தப்பித்து ஓட, அதை ஏராளமான சிறுவர்கள் துப்பாக்கியுடன் துரத்துவதாக ஆரம்பிக்கிறது. (கோழியையே துப்பாக்கியுடன் துரத்தும்போதே யோசித்திருக்க வேண்டும் படம் எப்படி இருக்கும் என்று..!!!).

இந்த இடத்தில் தான் கோழியை துரத்தும் கும்பலின் எதிரில் வருகிறான் நம்ம கதை சொல்லி (Narrator) ராக்கெட் . அதே நேரம் ரோட்டின் மறு புறத்தில் இந்த ரவுடி கும்பலை பிடிக்க போலீஸ் வந்து சேர்கிறது, இரண்டு பக்கமும் துப்பாக்கிகளை வைத்திருக்கும் இவர்களுக்கு இடையில் ராக்கெட் மாட்டிக்கொள்ள, ஒரு 180 டிகிரியில் காமெரா அவனை சுழல்கிறது, காமெரா அவன் கண்ணை காண்பிக்க, " நான் எப்படி இந்த இடத்தில் ?? " - என்று கதை சொல்ல தொடங்குகிறான் ராக்கெட்.



அப்படியே படம் பின்னோக்கி பயணித்து 1960 - களில் தொடங்குகிறது, சிட்டி ஆப் காட் நகரம் எப்படி உருவானது, மக்கள் எப்படி உயர் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இங்கு வந்து சேர்கின்றனர், ஏழ்மையை போராட சி.ஆ.கா மக்கள் செய்யும் சின்ன திருட்டு, வழிப்பறி அனைத்தும் ராக்கெட் மூலமாக நமக்கு விவரிக்கப்படுகிறது. இப்படி சிறு திருட்டுகளை செய்யும் "டெண்டெர் ட்ரையோ " என்ற மூவரிடம் இருந்து கதை தொடர்கிறது.

இந்த மூவரையும் ஹீரோ போல் பாவிக்கும் ஒரு பொடிசு லில்-ஸே. ஒரு கட்டத்தில் மூவருக்கும் பணம் தேவைப்பட, லில்-ஸேவின் ஐடியாப்படி ஒரு மோட்டலை(விடுதி) கொள்ளை அடிக்க போகின்றனர் நால்வரும் (லில்-ஸே உட்பட..). அங்கு ஏற்படும் சில எதிர்பாரா சம்பவங்களும், அதனை தொடரும் சில பல கொலைகளும் கால ஓட்டத்தில் லில்-ஸேவை எப்படி ஒரு மாபியா கும்பலுக்கு தலைவன் ஆகிறான் என்பது வரை வந்து நிற்கிறது படத்தின் முதல் அத்தியாயம்.



பின் வரும் அத்தியாங்களில் ராக்கெட் இந்த கறைபட்ட சமூகத்தில் இருந்து விடுபட்டு எப்படி கரையேறுகிறான் என்றும், மறுபுறம் லில்-ஸே போதை பொருள் மார்க்கெட்டை தன் கைக்குள் கொண்டு வருவதையும் விவரிக்கின்றது. இந்த காட்சிகளில் குறிப்பிடப்படவேண்டியது நடுவில் வரும் ஒரு "அப்பார்ட்மென்ட்டின் கதை". ஒரு அப்பார்ட்மென்ட்டை மையமாக வைத்து, அங்கு முதலில் குடி இருந்த பெண்ணிடம் இருந்து எப்படி போதை வியாபாரம் பல கைகளுக்கு மாறி கடைசியில் லில்-ஸே எப்படி அதை கைப்பற்றுகிறான் என்பது வரை, அந்த அப்பார்ட்மென்டின் கண்ணோட்டத்திலேயே அதை விவரிப்பது சுவாரஸ்யம்.

லில்-ஸே தன் நண்பன் பென்னியுடன் சேர்ந்து மொத்த நகரத்தையும் அபகரிக்க முற்ப்படும்போது, கேரட் என்ற இன்னொரு மாபியா தலைவனுடன் மோத நேர்கிறது, அதே நேரம் ராக்கெட்டின் காதல் முயற்சி, மாபியா முயற்சி என அனைத்தும் தோல்வி அடைகிறது. உதாரணம் : ஒரு பேக்கரியை கொள்ளை அடிக்க ராக்கெட்டும் அவன் நண்பனும் துப்பாக்கியுடன் செல்ல, அங்கு இருக்கும் பெண் அழகாக இருப்பதால் கொள்ளை அடிக்க மனம் இன்றி அந்த பெண்ணின் போன் நம்பருடன் திரும்புகிறான் ராக்கெட். பய புள்ள நம்ம இனம்.



லில்-செயின் நண்பன் பென்னி கொல்லப்பட, கேரட் மீதான லில்-ஸேவின் வெறியாட்டம் தொடங்குகிறது. இதற்கிடையில் லில்-ஸேவிற்கு எதிராக நாக்அவுட் - நெட் என்கிறவரும் கேரட்டின் மாபியாவில் சேர்ந்துகொள்ள (இது ஒரு தனி கிளைக்கதை), இரு கும்பலுக்கும் ஒரு பெரிய போரே தொடங்குகிறது. இவர்களுக்கு இடையில் ராக்கெட் வந்து சேர்ந்தது எப்படி, அந்த கோழி பிடிக்கும் முதல் காட்சி என்ன ஆனது என்று பல சுவாரஸ்யங்கள்- உடன் படம் தொடங்கியே இடத்திலேயே படத்தை முடித்திருப்பது டைரக்டர் டச்.
இன்னும் படத்தில் சுவாரஸ்யங்களும் கிளைக்கதைகளும் ஏராளம்..!!!



க்ரைம், போதை, கொக்கைன், மாபியா, லஞ்சம், வறுமை என பிரேசில் நாட்டின் அணைத்து இருண்ட பக்கங்களையும் வெளிச்சத்துக்கு காட்டியிருக்கிறார் இயக்குனர். படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்ப்பரிக்கும் இசை (பல காட்சிகளில் அந்த காட்சியின் டெம்போவிற்கு ஏற்ப நம்மையும் ஆட வைக்கிறது ), காமெரா (அற்புதமான ஒலியமைப்பு, ஒரு டார்க் தீம் படத்திற்கான முன்னோடி ) மற்றும் இதுவரை எங்கும் பார்த்திடாத இந்த படத்தின் நடிகர்கள்..மிக மிக யதார்த்தம்.

நான்கு ஆஸ்கார் நாமினேஷன் உட்பட பல விருதுகளை குவித்த இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ்....!!!!


படத்தின் ட்ரைலர்



-------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, July 26, 2010

மை லிட்டில் ப்ரைட் 어린 신부 My Little Bride - 2004




பெரியவர்களின் வற்புறுத்தலாலும், மரணப் படுக்கையில் இருக்கும் தாத்தாவின் ஆசைக்காகவும் சிறுவயதில் இருந்து அண்ணன் தங்கை போல் பழகி வந்த இருவருக்கு கல்யாணம் செய்ய நேரிடுகிறது.....ச்சே...இதே கதையை எத்தன படத்தில் பார்த்திருப்போம் என்பவர்கள், நிற்க....!!! இதே கதையை கண்டிப்பாக நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த திரைக்கதையும், கதை பாத்திரங்களும், காட்சிகளும் உங்களை சிரிக்க வைக்கும், உற்சாக படுத்தும், ஏக்கப்படவும் வைக்கும்....கண்டிப்பாக மச்சான்ஸ்...


மை லிட்டில் ப்ரைட் 2004 -ல் கொரிய மொழியில் வெளிவந்த ஒரு ரொமாண்டிக் நகைச்சுவை திரைப்படம்.



சங்க்மின், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக தன்னை தயார் படுத்திகொண்டு இருக்கும் ஒரு இளைஞன். படிப்பை வெளிநாட்டில் முடித்துவிட்டு வெகு நாள் கழித்து வீட்டுக்கு வர, வீட்டுக்கு வந்தவுடன் தாத்தா ஒரு குண்டை போடுகிறார் (ஒரு சின்ன பிளாஷ்பேக் எல்லாம் சொல்லுவார்). அதே வீட்டில் இருக்கும் தனது பேத்தி புவ்னா-வை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார். இதுல என்ன ஸ்பெஷல் மேட்டருன்னா புவ்னா இன்னும் பள்ளி படிப்பை கூட முடிக்காத பதினைந்தே வயது நிரம்பிய குட்டி பெண்.

சங்க்மின், புவ்னா இருவருமே எதிர்ப்பு தெரிவிக்க, தாத்தா (வில்லங்கமான) ஒரு சின்ன ஆசுபத்திரி நாடகத்தை அரங்கேற்றி வேலையை முடிக்கிறார். கல்யாணத்திற்கு பிறகும் புவ்னா தன படிப்பை தொடர்வாள் என்றும், அதுவரை காச் மூச் கஸமுஸா கூடாது என்ற சில கட்டுபாடுகளுடன் அவர்களின் பெற்றோர் இந்த திருமணத்தை நடத்துகின்றனர்.



இந்த இடத்தில் புவ்னாவை பத்தி கொஞ்சம் பார்ப்போம், இந்த படத்தோட உயிர் நாடியே இந்த புவ்னா கேரக்டர் தான். மூன் யங் என்கிற குட்டி பெண்தான் இந்த படத்தின் புவ்னா.படம் முழுக்க தன குழந்தைத்தனமான நடிப்பாலும், குறும்புகளாலும், அந்த கொரிய மொழிக்கே உரித்தமான ஸ்லாங்கில் இவர் இழுத்து இழுத்து பேசும்போது நம்மை கவர்ந்து விடுகிறார். புவ்னா கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக வயது இருந்தாலும், இன்னொரு காரணமும் உண்டு. அந்த காரணத்தின் பெயர் ஜங்க்வூ. ஜங்க்வூ அவர்கள் பள்ளியின் பேஸ்பால் வீரன். புவ்னாவிற்கு ஜங்க்வூ மீது ஒரு ஈர்ப்பு மற்றும் ஒருதலையாய் காதல். இவை அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே , அனைத்தையும் மீறி புவ்னாவிற்கு சங்க்மினுடன் திருமணம் முடிந்துவிடுகிறது.


புவ்னாவின் திருமணம் அவள் பள்ளியில் தெரிந்தால், படிப்பு பாழ் ஆகிவிடும் என்பதால், தலைமை ஆசிரியர் தவிர மற்ற அனைவரிடமிரிந்தும் மறைக்கப்படுகிறது. இது புவ்னாவிற்கு வசதியாய் போய்விட, ஜங்க்வூ உடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு, இருவரும் உல்லாசமாய் ஊர் சுற்றுகின்றனர். அதே நேரம் சங்க்மின்னும், புவ்னாவும் தனி வீட்டிற்கு குடி பெயர்கின்றனர்.


நோட் பண்ணிக்கங்க : இந்த புது வீட்டில் வரும் "ஜட்டி" சீனும், பென்சில் சீனும் செம காமெடி...!!! இரண்டிலுமே புவ்னாவின் அந்த முக பாவனைகள் கலக்கல்.

இருவரின் வாழ்க்கையும் தொடர்ந்து இப்படியே போய்க்கொண்டிருக்க, இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்டு, சங்க்மின்னுக்கு புவ்னா படிக்கும் அதே பள்ளியில், ஓவிய ஆசிரியராக வேலை கிடைக்கிறது. முன்னறிவிப்பின்றி திடீரென பள்ளியில் தோன்றும் சங்க்மின், பின்னர் புவ்னாவுடன், நம் உறவு யாருக்கும் தெரியக்கூடாது என்ற ஒப்பந்த்தத்துடன் பள்ளியில் தொடர்கின்றனர்.




பள்ளியில் ஒரு இளம் வாத்தியாராக சங்க்மின் வளம் வர, பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் அவர் மேல் ஒரு தனி அட்டென்ஷன் வந்துவிடுகிறது. அட, வயசு பொண்ணுங்களுக்கு வந்தா பரவாயில்லை, அதே ஸ்கூல்ல வேலை பார்க்குற, கிம் அப்படிங்குற ஒரு டீச்சருக்கும் ஈர்ப்பு வந்துடுது. கிம் வேணும்னே வந்து வந்து சங்க்மின் கிட்ட வழியும் காட்சிகள், ரவுசு காமெடி.

சில பல, ட்விஸ்ட்டுகளுடன் சங்க்மின்னும் புவ்னாவும் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சேர்கின்றனர் என்பதுதான் மீதி கதை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. கண்டிப்பாய் பார்த்து என்ஜாய் செய்ய வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ். படம் முடிந்தவுடம் ஐயோ படம் முடிந்து விட்டதே என்று தான் தோன்றியது :)


நோட் பண்ணிக்கங்க : இடையில் ஒரு பெரிய்ய்ய்ய சுவற்றில் புவ்னா படம் வரைய வேண்டி வரும், அந்த சுவற்றை பார்த்தவுடன் இந்த பொண்ணு செம க்யூட்ட ஒரு ரியாக்ஷன் விடும் பாருங்க...ப்ச்...பார்த்துட்டு வாங்க பேசுவோம்...!!!

"MY WIFE IS 18 " என்ற ஹாங் காங் நாட்டு திரைப்படத்தின் தழுவல் தான் இந்த படம். கொரிய படங்கள் என்றாலே ரியாலிட்டி, உலகத் தரம், கொடூரம், ரத்தம், சதை என்ற என் நினைப்புகளை (ஏன்னா நம்ம பார்த்த படங்கள் எல்லாமே அப்படிதான்) லேசாய் மாற்றியது "MY SASSY GIRL" படம். இந்த படம் அந்த நினைப்பை தகர்த்து விட்டது. பார்த்து என்ஜாய் பண்ணுங்க மச்சான்.


Friday, July 23, 2010

ஒரு சின்ன குறும்படம்

சசிகுமார் இயக்கிய ஒரு அழகிய குறும்படம்...
அந்த குழந்தையை போல, எனக்கும் பார்த்தவுடன் '' ப_._வேண்டும்" என்று தோன்றியது.... :)

Tuesday, July 13, 2010

லீடர் - Leader - లీడర్ (2010)




நமக்கு தெலுங்கு படம் பார்க்கும் சில நண்பர்கள் உண்டு மச்சான்ஸ், அவ்வப்போது சில நல்ல படங்களை (உலக தரம் எல்லாம் இல்லீங்க, நல்ல காமெடி, ஆக்ஷன், மசாலா மட்டுமே..!!!) நமக்கும் சொல்லி பார்க்க சொல்வார்கள். நமக்கும் தெலுங்கு நல்லாவெல்லாம் தெரியாது, அரை குறை தான், நன்றி சப்டைட்டில் சாமி. இப்படிதான் போக்கிரி(தெ), சை, விக்ரமாற்குடு, ஸ்டாலின் என்று பல நல்ல படங்கள் பார்த்திருக்கிறேன்.

இப்படி சமீபத்தில் பார்த்த படம்தான் லீடர். டைரக்டர் சேகர் கம்முலாவின் படம். ஹாப்பி டேஸ் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர் (ஆந்த்ராவிலும், கேரளாவிலும் கூரையை பிய்த்துக்கொண்டு ஓடிய படம்). வெகு நாட்களாக டவுன்லோட் செய்து வைத்திருந்து சப்டைட்டில் இல்லாததானால் பார்க்கமலேயே வைத்திருந்தேன், நேற்றுதான் முழுப்படமும் யு-ட்யூபிலேயே கிடைத்தது (சப்டைட்டிலுடன் - நல்ல பிரிண்ட்டு !!!!)




நக்சலைட்டுகள் ஆந்திராவின் முதலமைச்சர் சுமனை குண்டு வைத்து கொல்வதில் இருந்து தொடங்குகிறது கதை. அர்ஜுன் பிரசாத், முதலமைச்சர் சுமனின் மகன் - அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்று ஒரு பெரிய கம்பெனியை நடத்துபவர். அப்பாவை மரணப் படுக்கையில் காண இந்தியா விரைகிறார். சுமன் தான் இறக்கும்போது, அர்ஜுனிடம் நீதான் அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தன் கடைசி ஆசையை சொல்லி விட்டு
இறந்து போகிறார்.

ஆட்சியில் உள்ள சாதிக்கட்சியின் தலைவர் பெத்தைனா-வாக கோட்டா சீனிவாசராவ். இவர்தான் ஆந்த்ராவின் கிங் மேக்கர். சுமன் இறந்துவிட்டதால் ஆட்சி கலையாமல் இருக்க, பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சுமனின் மற்றொரு உறவினரான சுப்புராஜ் (இவர்தாங்க வில்லன் ) என்பவரை முதல்வராக்க முடிவெடுக்கிறார். பெத்தைனாவுக்கு சுமனின் கடைசி ஆசை அப்போது தெரியாது.




சுமனின் இறுதி சடங்கில் அர்ஜுனை சந்திக்கும் பல பெரும்புள்ளிகள், முதலமைச்சர் என்னிடம் கொஞ்சம் பணம் கொடுத்து வைத்துள்ளார் என்று பெரிய பெரிய தொகையாக சொல்கின்றனர். சுமனின் டைரிக்குறிப்பு ஒன்றில் ஒரு வீட்டை பற்றி எழுதியிருக்க, அங்கு சென்று பார்க்கும் அர்ஜுனுக்கு பெரும் அதிர்ச்சி, அங்கே கட்டு கட்டாக அறை முழுவதும் பணம் (நம்ம அருணாச்சலம் படத்துல வந்த மொத்த பணத்தையும் இங்க கொண்டு வந்துட்டாங்க).

இதுநாள் வரை நல்லவர் என்று நினைத்திருந்த தன் தந்தையும், ஒரு சராசரி லஞ்ச அரசியல்வாதி என்று தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். இந்த எடத்துல நம்ம ஹீரோவின் மனசை மாத்துறா மாதிரி ஒரு பாட்டு . மக்களின் பல அவலங்களை படம் பிடித்து காட்டுகிறார்கள்.




இறுதியில் ஹீரோ அர்ஜுன் தானே முதலமைச்சர் ஆவது என முடிவு செய்தது தன்னிச்சையாக (பெத்தைனாவுக்கு தெரியாமல்) காரியத்தில் இறங்குகிறார். மற்றொருபுறம் சுப்புராஜை முதலைமச்சர் ஆக்க கட்சி பணிகளும் செய்யப்படுகிறது. அர்ஜுன், சுமன் சம்பாதித்து (கொள்ளையடித்து) சென்ற பல்லாயிரம் கோடி( 1,00,00,00,00,000 தோராயமா இத்தினி ரூபா மச்சான்ஸ்) ரூபாயை வைத்து எப்படி சதி செய்து ஆட்சியில் அமர்கிறார் என்பது தான் முதல் பாதி படத்தின் கதை.

ஆட்சிக்கு வரும் ரானாவிற்கு சுப்புராஜ் குடைச்சல் குடுக்க, அதை எப்படி சமாளிக்கிறார் என்பதும், நாட்டை நல்வழி படுத்த என்னென்ன செய்கிறார் என்பதையும் இந்த கால கட்ட அரசியலுக்கு ஏத்தார் போல் (மனதில் வைத்துக்கொண்டு) விறுவிறுப்பாக ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து வெள்ளித்திரையில் தூள் செய்திருக்கிறார் டைரக்டர் சேகர் கம்முலா. படம் கிட்டத்தட்ட முதல்வன் கொஞ்சம் சிவாஜி கொஞ்சம் என ஷங்கர் ஸ்டைலில் அமைந்திருக்கிறது. இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வருவேண்டும் என்பதே படத்தின் பிரதான மெசேஜ்.




அர்ஜுன் பிரசாத்தாக புதுமுகம் ராணா, கதைக்கு ஏத்தாற்போல் அலட்டிக்கொள்ளாத அமைதியான நடிப்பு. அப்புறம் ரெண்டு ஹீரோயின்ஸ். முதல் பாதியில் வாமணன் பட நாயகி ப்ரியா ஆனந்த். இந்த படத்தில் கலக்கிவிட்டார் ரசிக்கும்படியான குறும்பு நடிப்பு. வாமணன் கேரக்டர்க்கு அப்படியே நேரெதிர், இந்த படத்தில் பேசிக்கொண்டே இருக்கும் CHATTER BOX . இரண்டாம் பாதியில் ரிச்சா (ரிச்சா பல்லோடு இல்லீங்க.. ) , இந்தம்மினி அமெரிக்க இறக்குமதி, செம ஹோம்லி, நடிப்பிலும்(?) கலக்கிட்டாங்க (ஹி ஹி)..


கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ்..

பி.கு : குத்துப்பாட்டு, மஞ்சா, பச்சை, செகப்பு சட்டை டூயட்டுகள் இல்லாத தெலுங்கு படம்.

படம் பார்ப்பதற்கான யு-ட்யூப் லிங்க்....
Part - 1
http://www.youtube.com/watch?v=qvBvJZOldjA

---------------------------------------------------------------------------------
Directed by Sekhar Kammula
Produced by AVM
Written by Sekhar Kammula
Starring Rana Daggubati, Richa Gangopadhyay, Priya Anand, Suhasini Manirathnam
Music by Mickey J Meyer
Cinematography Vijay C. Kumar
Editing by Marthand K Venkatesh
Studio AVM Productions

---------------------------------------------------------------------------------




--------------------------------------------------------------------------------

ஒரு சின்ன ஹைக்கூ....


திரௌபதி தேசம்


உள்ளாடை தெரிய
அணியும் மினி-ஸ்கர்ட்டில் -
"MADE IN INDIA".

-----------------------------------------------------------------------------
Related Posts Plugin for WordPress, Blogger...