Sunday, August 16, 2009

இவண் தமிழன்

பருந்திற்கு தன் குஞ்சு இன்று இரையாகப் போகிறது

என்பதை அறியாமல் தன் குஞ்சிற்கு

இரைதேடி செல்கிறது தாய்க்குருவி !

"தாய்க்குருவி என் தாய்நாடு,

தீவிரவாதம், மதக்கலவரம், பட்டினிச்சாவு,

ஊழர்போர், பயங்கரவாதம் - அவள்

கொண்டாடும் பிள்ளைகளை

கொண்டாடும் பிணிகள் !"

அர்த்தநாரீஸ்வரரின் ஆளுகைதான் இங்கு

எங்கும் தலைவிரித்து ஆடுகிறதோ என்று

எண்ண தோன்றுகிறது.

"மேல் தட்டு மன்னர் - அடித்தட்டு மக்கள்

விண்வெளி வெள்ளோட்டம் - வயல்வெளி வெள்ள ஓட்டம்

வெள்ளம் - வறட்சி"

இன்னும் பட்டியல் ஏராளம்,

எனக்கான பக்கங்களோ குறை நீளம்!

2020-ல் இந்தியா ?

இந்திய தேசம் வல்லரசு ஆகிவிடலாம்,

ஆனால் என் இனத் தமிழன் அன்றும் ஏர்பூட்டி

வயர்க்காட்டிற்குத்தான் நடந்து கொண்டிருப்பான் .

"அவன் அடுத்த வேலை சோற்றுக்கு !"

"அவன் கண்டவையோ ஏராளம்,

வறட்சியில் பட்டினிச்சாவு,

வெள்ளத்தில் பொட்டலச்சோறு,

அழுகிய பயிர்கள்,உணவிற்கு எலிக்கறி,

இன்னும் எத்தனையோ !

" எல்லாவற்றையும் தாண்டி,

அவன் தன் வாழ்க்கையை தொடங்கிய தொலைவிலேதான்

இன்றும் இருக்கிறான், முன்னேற்றம் இன்றி !

"தமிழகத்தின் மீது சோக ரேகைகள்

இன்றும் படர்ந்து கொண்டுதான்

இருக்கின்றன - வறண்ட நதிகளாய் ! "

இந்தியா முன்னேறுகிறது ?

ஆம் இந்தியா முன்னேறுகிறது.

"மென்பொருள் தயாரிக்கும் இந்தியனுக்கோ

மாதத்திற்கு பல லகரங்கள்,

உணவுப்பொருள் உற்பத்தியாக்கும்

இந்தியனுக்கு ?

வருடந்தோறும் அரசாங்கம் தரும்

இழப்பீட்டு தொகைதான் - அவன்

வருட வருமானமோ ? ....."

"உழவனின் அரிசி எண்ண

அற்பமாகிவிட்டதா ?

மறந்துவிட்டாயா மனிதனே,

உன் இறப்பிலும் கூடவருவது

வாய்க்கரிசிதான் ! "

தோழனே, நம் நாடு 2020-ல் வல்லரசாகிவிடும்,

அதில் ஐயமில்லை - அன்று

நம் உழவுத்தோழனை

சிற்றரசனாக்க வேண்டாம்,

ஒரு சராசரி மனிதனாகவாவது

அவன் களிப்பாக வாழட்டுமே ?

"வாள் முனையினும் வலியது பேனாமுனை.

அதனினும் வலியது - என் இனத் தமிழனின் ஏர்முனை!"

சிந்திப்போம் ! உயர்த்துவோம் !

- இவண் தமிழன்.

Related Posts Plugin for WordPress, Blogger...