துண்டு துண்டாய்
என் சதைப்பிண்டத்தை நானே
கூறிட்டுக் கொண்டிருந்தேன்..
இறுதிச்சொட்டு
உயிரிடமிருந்து
பீறிட்டு பெருக்கெடுக்க
ஆரம்பித்தது அழுகை..
தந்தையின் அஸ்தியைக் கரைக்கும்
தனயனைப்போல்
மிகச் சிரத்தையுடன் மிச்சமிருக்கும்
என் கருநீல உடலை
நீர்த்திவளைகளிலான
கடலில்
கரைத்துக்கொண்டிருந்தேன்...
உள்ளங்கையில் ஜனித்து
உள் நரம்பெங்கிலும்
வியாபித்திருந்த உன் வாசம்
போக்கும் ஒரு வகை
வேள்வி தான் அது.
நீர்த்தொட்ட நொடியினில்
ஒரு துளியென தொடங்கி..
தீயென ப்பரவி
அண்டத்தின் மிகப்பெரும்
வாசனைக்கிடங்காக
உருமாறிவிட்டிருந்தது
இந்த பாழாய்ப்போன சமுத்திரம்
இனி என் செய்வேன்
உன் வாசம் களைய..
- அருண். இரா